Thursday 12 March 2009

குளங்கள்

எந்த ஊருக்குமே ஆறு, குளம், வாய்க்கால்கள் போன்ற நீர்நிலைகள்தான் வளத்திற்கு ஆதாரம். நமதூரில் சில பத்து வருடங்களுக்கு முன்பு வரை ஏராளமாக இருந்த நீர் நிலைகள் இப்போது எங்கே? தனிப்பட்ட நபர்களின் நிலங்களுக்கு அருகே இருந்து அவர்களால் மெதுவாக ஆக்கிரமிக்கப்பட்டு ஜீரணிக்கப்பட்ட குளங்களயும் வாய்க்கால்களும் நிறைய உள்ளன. அதை அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் விட்டுவிட்டு, பள்ளிவாசல்களின் குளங்களுக்கு வருவோம்.

நீச்சல் என்ற அற்புதமான உடற்பயிற்சியை உயிர்காப்பை நமக்கெல்லாம் கற்றுதருவதற்கு, முன்பு எத்தனை குளங்கள் இருந்தன! கிட்டதட்ட அனைத்து பள்ளிகுளங்களும்.... அனைத்தும் எங்கே? எல்லா குளங்களும் பராமரிப்பின்றி பல காலமாய் தூர் வாரப்படாமல் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டுள்ளது என்பது ஒரு வேதனை என்றாலும், அதைபற்றிய கவலையோ, அக்கறையோ சீர் செய்யும் சிந்தனையோ எந்த பள்ளிவாசலின் நிர்வாகத்தினருக்கும் முஹல்லாவாசிக்குகூட இல்லை என்பது அதைவிட அதிகமாய் மனதை அறுக்கும் வேதனை அல்லவா?

அன்பிற்குரியவர்களே !

சற்று சிந்தித்து பார்ப்போம். எதுஎதற்க்கெல்லாமோ நம் முன்னோர்கள குறைசொல்லும் நாம், இன்னும் 50 வருடங்கள் கழித்து எத்தனை முஸ்லிம்கள் தொழவருவார்கள் என்ற தீர்க்க சிந்தனையோடும், விசாலமனதுடனும், விரிவாக்கும் வசதிகளுடனும், அற்புதமான பள்ளிவாசல்கள், இறையில்லங்களை நம் முன்னோர்கள் நமக்காக நிர்மாணித்து விட்டு சென்றுள்ளனர். அதைவிட அதிக விசாலத்தனத்துடன், குளங்களை வெட்டி நன்மையை நிலையாக தேடி வைத்து சென்றுள்ளனர். நமக்கு வழங்கப்பட்ட இத்தகைய பொக்கிஷங்களை நாம் எந்த நிலைமையில் நமது சந்ததியினரிடம் கையளித்து செல்லப்போகிறோம் என்பதை சற்றாவது சிந்தித்து பார்க்கவேண்டாமா? புதிதாக ஒன்றும் செய்ய முடியாதென்றாலும் இருப்பதை சிறப்பாக காப்பாற்றி வைப்பதே சிறந்த செயலாக இறைவனால் கருதப்படும் அல்லவா? இங்கேயும் ஒரு ஸ்பெயினை வேண்டி விரும்பி அழைப்பவர்கள போலல்லவா நாம் அலட்சியமாக இருக்கிறோம்! குளங்கள் என்பது நமது கலச்சார அடையாளங்களில் ஒன்று. இந்த ஊரின் நிலத்தடி நீர்நிலையின் அளவுகோல், அதனை நிர்ணயிப்பதும் அதுவே. முஸ்லிம்கள் ஆயிரம் வருடம் இந்தியாவை ஆண்டார்கள். ஆனாலும் அவர்கள் (குறிப்பாக முகலாய மன்னர்கள்) வரலாற்று ஆய்வாளர்களால் மிகவும் புகழப்படுவது கட்டிடங்கள், தோட்டங்கள், மற்றும் நீர்நிலைகள் உருவாக்கத்தில் அவர்களின் பங்களிப்பிற்க்காகத்தான். தூர்வாரப்படாமல் அழுகிப்போய்கொண்டிருக்கும் ஒவ்வொரு பள்ளிவாசல் குளமும், அங்கு தொழவரும்/தொழ வராத ஒவ்வொரு முஹல்லாவாசிக்கும் அவமானச்சின்னமாகத்தான் கருதப்படவேண்டும்.

இந்த விஷயத்தில் தூர் வாரும் செலவுதான் பிரதான பிரச்சனையாக முன்வைக்கப்படுகிறது. நிச்சயமாக சொல்கிறோம். அல்லாஹ்வுக்காக அவனது இல்லம் சம்மந்தபட்ட சொத்துக்களில் ஒன்றை சீர்செய்வதற்காக முயல்கிறோம் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் இதற்கான நிதி என்பது சிரமமே இல்லை.

அல்லாஹ் தான் கொடுக்கிறவன்.

அவர்கள் அதற்காகதான் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.

அதுபோல் குளம் தூர்வாருகின்றவர் செய்யும் தவறுகளில் ஒன்று தூர்வாரும் போது குளத்தை சுற்றி சிமெண்ட் கட்டை சுவர்கள் கட்டாமல் மண்தடுப்புக்கல் மட்டுமே வைத்து முடித்துவிடுவது அது கண்டிப்பாக நிலைக்காது அறை குறை முதலீடுபோல் மிகசில வருடத்திலேயே மீண்டும் தூர்வாரும் அவசியம் ஏற்படும். உதாரணம் மீராப்பள்ளியில் உறுதியான சிமெண்ட் தடுப்பு சுவர் அதற்கு அருகாமையில் மேற்கு புறமுள்ள இரண்டு பள்ளிகளில் கட்டப்பட்ட வீதமும் அதன் இன்றைய நிலையும். அடிப்படையாக இரண்டு விஷயங்கள மனதில் கொண்டாலே போதும்.1. அந்நாளில் உங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகள் பற்றி நிச்சயமாக கேள்விகேட்கப்படுவீர்கள் என்ற நம்மை படைத்த இறைவனின் எச்சரிக்கை (சூராஹ் அத்தகாசுர்(102)) 2.

சதக்கத்துல் ஜாரியா எனும் நிலையான தர்மத்தில் ஒன்றுதான் இந்த குளங்கள சீர் செய்யும் விஷயம் என்பதால், நீங்கள் ஒரு பள்ளியில் நிர்வாகியாக இருந்தால் இந்த விஷயத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற நிய்யத்! அல்லது நீங்கள் ஒரு முஹல்லாவாசி என்றால் அல்லாஹ்வுக்காக இந்த விஷயம் குறித்து பள்ளி நிர்வாகத்திற்க்கு ஒத்துழைக்க வேண்டும், நிர்வாகத்திற்கு அந்த எண்ணமே இல்லையென்றால் அதுகுறித்து அவர்களுக்கு அழுத்தம் தரவேண்டும் என்ற நிய்யத்!

நிச்சயமாக அல்லாஹ் நிய்யத் (எண்ணங்கள) தான் கவனிக்கின்றான். அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments: