Saturday 8 May 2010

மீராப்பள்ளி.

மீண்டும் மீராப்பள்ளி...

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் முன்புற வளாகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் இவ்வேளயில், பள்ளியின் இடதுமுன்புறம் அமைந்துள்ள கபர் ஒன்று தரைமட்டத்திற்கு கீழேயும், குப்பைகள் மற்றும் கழிவுகளுக்கு மத்தியில் இருந்ததால், குப்பைகள் சேர்வதை தடுக்கும் முயற்சியாக பள்ளி நிர்வாகம் அந்த பகுதியை சீரமைக்க முடிவு செய்தது. இப்பணி நடந்துகொண்டிருக்கும் வேளயில் சில தனிப்பட்ட நபர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த கப்ர் சற்று உயர்த்தி கட்டப்பட்டது. அதே சமயம்,மீராப்பள்ளி நிர்வாகத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத சிலநபர்கள் குழப்பம் விளவிக்கும் நோக்கோடு அந்த கபரை செம்மைப்படுத்தி அனாச்சாரங்களுக்கு அதனை பயன்படுத்த எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.இதனையறிந்த இளஞர்கள் மற்றும் பொதுமக்கள் பரவலான எண்ணிக்கையில் ளுஹர் தொழுகைக்கு பிறகு கூடி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். அப்போது சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து இந்த பிரச்சனை ஐக்கிய ஜமாஅத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. மஃக்ரிபுக்கு பிறகு நிர்வாகமும், பொதுமக்களும் அமைதியான முறையில் ஜமாஅத்தில் அமர்ந்து பேசி மேலும் இப்பிரச்சனை தொடராமலிருக்க, புதுப்பிக்கப்பட்ட கப்ர் அமைப்பு இதன் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், அதனருகில், எந்தவிதமான வழிபாடு சார்ந்த அனாச்சாரங்களும் எக்காலத்திலும் நடைபெற மீராப்பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக அனுமதிக்காது என்றும் நிர்வாகத்தாலும், ஜமாஅத்தாலும் உறுதிமொழி வழங்கப்பட்டது.

மெருகேறும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி



காலசூழல்களுக்கேற்பவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நமதூர் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் சுற்று முழுவதும் தரமான இரும்பு கிரில் கேட்கள் அமைக்க ஜும்ஆவில் பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் அழகிய முறையில் அமைக்கவும் பட்டது. தற்போது மஸ்ஜிதின் முன்புறம் மழை / வெயில் கருதி சிமெண்ட் ஷீட் கொண்டு சிறிது தூரம் கூரை அமைக்கப்பட்டுள்ளது. பெருநாள் போன்ற மக்கள் அதிகம் கூடும் தினங்களில் இது மிகவும் வசதியாக அமையும். மீராப்பள்ளி சம்பந்தப்பட்ட வளர்ச்சி பணிகள குறை கூறும் அபத்த போக்கு முன்பு சிலரிடம் காணப்பட்டது.இறையில்லத்தை பரிபாலனம் செய்வது, எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அவற்றை விஸ்தீரணம் செய்வது போன்றவை இயல்பாகவே மஸ்ஜித் நிர்வாகத்தின் பணிகளாகும். பேரூராட்சியின் மயான மேம்பாடு திட்டத்தினை பயன்படுத்தி கபுருஸ்தானை ஒழுங்கமைத்தது, பெரும்பாலும் எங்குமே இந்தளவு உருப்படியாக காணக்கிடைக்காத குளத்தினை பராமரித்து வருவது போன்ற பாராட்டத்தக்க விஷயங்கள நிர்வாகம் தொடர்ந்து செய்துதான் வருகிறது. அதனை பாராட்டாமல் இருந்தாலும் சரி, குறை சொல்லாமலாவது இருக்கலாம். மேலும், இப்படி வளர்ச்சி பணிகள முன்னெடுத்து செல்லும் மீராப்பள்ளியை குறை சொல்பவர்கள், பல பத்து வருடங்களாக இருந்தது போலவே இருந்து வரும் சில பள்ளிகள் குறித்து ஏன் ஒரு வார்த்தைகூட கேட்பதில்லை பேசுவதில்லை என்பது புரியாத புதிர்தான்.

புதிய பொலிவுடன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி


புத்தம் புதிதாக கட்டப்பப்ட்டுள்ள நமதூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் ஆயிரத்தி ஐந்நூறு (1492) பெண் பிள்ளைகள் படிக்கிறார்கள். நாம் சென்று பார்த்த போது சிறு பிள்ளைகளிடம் புதிய பள்ளி வளாகத்தில் புழங்கும் மகிழ்ச்சி தெரிந்தது. விசாலமான புதிய வகுப்பறைகள், வராந்தாக்கள் .... இட நெருக்கடி மிகுந்த பழைய வண்டிக்கார தெரு பள்ளிக்கூடத்திற்கு இது எவ்வளவோ தேவலாம்.

பொலிவான முன்புற தோற்றம்

மொத்தம் உள்ள இருபத்து எட்டு செகஷன்களில் பதினாறு ரூம்கள்தான் புதிய கட்டிடத்தில். மீதி எல்லாம் கொஞ்சம்

சரியற்ற பழைய கட்டிடங்கள். அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டே ஆக வேண்டிய நிலைதான். குறிப்பாக முன்னாள் கம்ப்யூட்டர் கட்டிடம்.

ஆங்கில வழி வகுப்புக்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களாவது தற்போது தேவை.

இத்தனை மாணவிகள் எண்ணிக்கை உள்ள பள்ளிக்கு முறையான ஒரு நூலகம் இல்லை என்பது இன்னொரு அவலம். இதை போக்க பள்ளியின் முதல்வர் ஒரு புதிய முறையை கையாளுகிறார். அதாவது, பிறந்தநாள் என்றோ விசேஷம் என்றோ லீவ் கேட்டு வரும் பிள்ளைகளிடம் அவர்களாகவே முன்வந்து சில நூல்களே பள்ளிக்கு அன்பளிப்பாக தருவதற்கு அன்பாக ஊக்கமளிக்கிறார். இப்படி சேகரிக்கப்படும் புத்தகங்கள் வகுப்பு தோரும் சுற்றுக்கு விடப்படுகின்றன.

நல்ல யோசனைதான்.

இந்த திட்டத்தின் மூலம் அனைத்து வகுப்புக்கும் தலா ஒரு டிக்ஷனரி தற்போது உள்ளது.

பள்ளிக்கு முறையான பரிசோதனை கூடம் உள்ளது. உபகரணங்களில் கொஞ்சம் தன்னிறைவு தேவை.

குட்டிச்சுவர்

சீர் படுத்தப்படவேண்டிய கழிவறை

மொத்தம் ஆயிரத்தி ஐந்நூறு பிள்ளைகளுக்கு பத்து யுரினல்களும், இரண்டு கழிவறைகளும்தான் உள்ளன. (ஆசிரியர்களுக்கும் சேர்த்து). மேலும் கழிவறை பக்கமுள்ள மிக குட்டியான சுவர் ஒன்று (முன்னால் பள்ளி இருந்தபோது மாணவர்கள் ஏறி குதித்து முத்தைய முதலி தெரு வழியாக எஸ்கேப் ஆக வசதியாக இருந்த சுவர்) அபாய எச்சரிக்கை ஒலித்தவாறு கிடக்கிறது. வெளியார்களின் அத்துமீறல் தவிர்க்கப்பட, கண்டிப்பாக அந்த குட்டி சுவர் உயர்த்தபட்டே ஆகவேண்டும். (பார்க்க: படங்கள்)

ஊரில் இத்தனை ஆங்கில பள்ளிகள் இருந்தும் தங்கள் பெண் பிள்ளைகளை நமது தாய்மார்கள் இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு பொருளாதாரம் மட்டும் காரணம் இல்லை. பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஒழுங்குகளும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

பள்ளி செயல்பட துவங்குவதற்கு முன்னாள் பள்ளியின் இரு புறத்திலும் வாடகை வாகனங்கள் நிறுத்தி வைத்து இருந்தார்கள். இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் நெருக்குதலின் பேரில் அவை போலீசாரால் அப்புறபடுத்தப்பட்டன . ஆனாலும் தற்போதும் சில வாகனங்கள் அவ்வப்போது அங்கு ஸ்டாண்ட் அமைத்து நின்று வருகின்றன. (பார்க்க: படங்கள்).

மேலும் தேவையே இல்லாமல் அங்கு சுற்றி வரும் ஊர்குருவிகளுக்கு தடுப்பு வலை போட (பெண்) போலீஸ் காவல் அவ்வப்போது அந்த இடத்தில் தேவை என்பதும் மக்களின் எதிர்பார்ப்பு. நிறைவேறுமா?

பள்ளியின் முன்புறம் தனியார் வாகன நிறுத்தம்

பிள்ளைகள் அனைவரும் - குறிப்பாக கல்வியில் பின்தங்கிய சமுதாயமாக பார்க்கப்படும் முஸ்லீம் பெண் பிள்ளைகள் - படிப்பில் முத்துக்களாக ஜொலிக்கிறார்கள் என்று தனது மாணவர்களை மெச்சிக்கொள்ளும் முதல்வர், அவர்களை படிப்பில் ஊக்கப்படுத்தும் விதமாக ஊர் பொது மக்கள் சார்பாக பரிசுகள் எதுவும் பெரிதாக வழங்கபடுவது இல்லை என்ற தனது ஆதங்கத்தையும் தெரிவித்தார்.

இது விஷயத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் முயற்சிகளை வெகுவாக பாராட்டிய பள்ளி முதல்வர், பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் இந்த பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வேலைகளில் இருந்து திறப்பு விழா முதற்கொண்டு அனைத்து வகையிலும் சிரமம் பார்க்காமல் ஒத்துழைத்த விதத்தினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

ஆனால் அரசு மட்டும் இது போன்ற பெரும் காரியங்களில் முழுமை செய்ய முடியாது தான். நன்றாக படிக்கும் , விளையாட்டில் , கலையில் , போட்டிகளில் சிறப்பாக செயல்படும் மாணவிகளுக்கு பல ஊர்களில் இருப்பது போல அறக்கட்டளை அமைத்து வருடா வருடம் அவர்களுக்கு ஊக்கப்படுத்தி சிறப்பிக்கலாமே. இது போன்ற எண்டோவ்மேன்ட்கள் (endowments) இது வரை ஊரில் ஒன்று கூட இல்லை என்பது வேதனைகுரிய விஷயம்தான்.

ஊரில் உள்ள பெரும் தனவந்தர்கள் அவர்கள் பெயராலோ அல்லது அவர்களின் முன்னோர் பெயராலோவாவது ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி இது போல் உதவலாமே?

இந்த செய்தியை படிப்பவர்கள் பிரயோஜனமாக எதையேனும் செய்தால் அல்லது யாரிடமாவது சொல்லி நல்லது செய்ய தூண்டினால் புண்ணியம். செய்வோமா?

ஆக்கம் : ஹமீது மரைக்காயர் - ஜெனிபாஹ்

பேட்டையில் பெய்தது மாமழை



மரித்துப்போன மனங்களை தனது அருளால் உயிர்ப்பிக்கும் மகத்தான கொடையாளனாகிய அல்லாஹ், வறண்டு போய் இறந்து விட்ட பூமியை செழிப்படைய செய்ய தனது கருணை மழையை இறக்குகிறான். வெக்கையான இரவுகளையும், வெளியே தலை காட்ட முடியாத வெயில் பகல்களையும் அனுபவித்து கொண்டிருந்த பரங்கிபேட்டை மாமக்களுக்கு ஒரு இனிய நற்செய்தியாக இன்று காலை சுமார் அரை மணி நேரம் பொழிந்து தள்ளிய மாமழை மிகப்பெரும் ஆறுதலாக அமைந்தது.

நேற்று கூட லேசாக இங்கும் அங்குமாக தூறல்கள் விழுந்தது. ஆனால், இரவில் அது புழுக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது பெய்த மழையினால் பொங்கிய நீர் பெய்து முடித்த சில மணித்துளிகளிலேயே காய்ந்து போய் தெருக்கள் மீண்டும் வறட்சியாக காணப்பட்டது இந்த கோடையின் கொடுமையை உணர வைத்தது.

மழை காமெடி

அழகிய மழைக்கால கச்சேரி தெரு
மீண்டும் புயல், மழை, வேக காற்று வீசும் என்று பத்திரிகைகளும் டிவீ யும் கடந்த நான்கு நாட்க்களாக ஸ்பிக்கர் கிழிய கத்தியது தான் மிச்சம். ஒரு துளி மழையும் இல்லை, சற்று வேகமான காற்று கூட இல்லை.


ஆனால் இன்று பத்திரிக்கைகளில் செய்தி புயல் அபாயம் நீங்கியது அடை மழை பயம் இலலை. இந்த செய்திக்காகவே காத்திருந்ததுபோல் இன்று காலை பிடித்த மழை மதியம் வரை தொடர்ந்து பெய்து வருகிறது.


இதில் நாம் கற்றுக்கொள்ள பாடம் ஒன்று இருக்கிறது - என்னதான் விளக்கமாக ரமணன் சார் சொன்னாலும் ஆண்டவன் நெனச்சாதான் மழை பெய்யும். (இதை அவரும் மறுக்க மாட்டார்)

மரண சிந்தனை

"டீ போட்டு வை. இதோ வந்துடறேன்" என்று சொல்லி விட்டு பாத்ரூம் சென்றவர், இப்போது நம்மிடையே இல்லை. (அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக). நாம் அனைவரும் மிக அடிக்கடி உபயோகப்படுத்தும் இந்த வார்த்தை ( இதோ வந்துடறேன் ) எத்தனை நிச்சயமற்ற வார்த்தை...!

நிச்சயமின்மை எனும் போர்வை நம் மீதும், நாம் டீல் பண்ணும் அனைத்து விஷயங்கள் மீதும் எப்போதும் படிந்துள்ளதை ஜனாசா தொழுகைக்கு வருகையில் (லாவது) கவனிக்க முடிந்தது.

மரணம் எனும் மாபெரும் நிதர்சனம் முகத்தில் அறையும் போது, சகலமும் அர்த்தமற்று போய்விடுகின்றன. நமது ஈகோக்கள், அபிலாஷைகள், ஏமாற்றங்கள், சூழ்ச்சிகள், உறவுகள், நல்லவை, கெட்டவை அனைத்தும் நம்மை பார்த்து கேலியாக சிரிக்கின்றன.

ஆடிக்கொண்டு இருக்கும் ஆட்டத்தில் நாமே இல்லாமல் போய் விட்ட பிறகு நமக்கு மிஞ்சுவது என்ன என்ற கேள்வியின் கணம் எப்போதும் தாங்க முடியாததாக இருக்கிறது.

சில பத்து வருடங்களின் வினைகளை பல ஆயிரக்கணக்கான வருடங்கள் வெம்மையில் காத்திருக்கிறது படைப்பாளனிடம் பதிலாக சொல்லி ஆகவேண்டும் என்ற உண்மை உரைப்பதற்க்காவது இந்த ஜனாசா தொழுகை எனக்கு பயன்படட்டும்.

அனைவரும் சுவைத்தே ஆக வேண்டும் என்று இறைவன் குறிப்பிடும் அந்த மெகா உண்மையின் வீரியம் (புரிந்தும்) புரியாமல் நமது கனவுகளில் புதைந்துக்கொண்டு நாம்....

(வாழும்போது நல்லவிதமாகவே வாழ்ந்து இன்று இல்லாமல் போய் விட்ட அனைவருக்காகவும், நமக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.)

பரங்கிப்பேட்டையில் கிக் பாக்ஸிங் பயிற்சி வகுப்புக்கள்



நாகரீக சமுதாயத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று விளயாட்டு மற்றும் உடற்பயிற்சி. உடலுக்கு வலுவூட்டும் அதே வேளயில், சிந்தனைகள வீணாக சிதறவிடாமல் அவை காக்கின்றன. பரங்கிப்பேட்டையில் பாட்மின்டன், ஷட்டில் தான் தேசிய விளயாட்டாக (சில தொய்வுகள் இருந்தாலும்) இருக்கிறது. வாலிபால் மற்றும் பெயர் குறிப்பிட்டால் பணம் செலுத்த வேண்டிவருமோ என பயப்படும் அந்த கார்ப்பரேட் விளயாட்டும் ஆங்காங்கே நடக்கின்றன. இந்நிலையில், பரங்கிப்பேட்டையில் கிக் பாக்ஸிங் பயிற்சி வகுப்புக்கள் துவங்கப்பட்டுள்ளது மனநிறைவினை தருகின்றது. கல்விக்குழுவின் முக்கிய உறுப்பினர் ஹமீது கவுஸ் அவர்களின் மிகுந்த ஆர்வம் மற்றும் முயற்சியினாலும், கடலூர் மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தின் முயற்சியினாலும் துவங்கப்பட்டுள்ள இதனை ஜமாஅத் தலைவர் யூனூஸ் நானா அவர்கள் கையுறை வழங்கி துவக்கி வைத்தார். இதுபோன்ற பிரயோஜனமிக்க முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும் பரங்கிப்பேட்டைக்கென்று ஒரு அவுட்டோர் மற்றும் இன்டோர் விளயாட்டரங்கம் (ஸ்டேடியம்) திறன்வாய்ந்த உடற்பயிற்சி மையம் (ஜிம்னாஷியம்) மற்றும் அனைத்து விளயாட்டு போட்டிகளயும் ஒருங்கினைத்து நடத்த ஒரு மைய டீம் ஆகியவை பற்றிய கனவு என்று நினைவாகும் என்றும் ஒரு ஏக்கம் பூக்கிறது.

மெய்ப்பட்டு வரும் கனவு


வெள்ளாற்றுக்கு குறுக்கே பாலம் சமைக்கும் பரங்கிமா நகரின் பெருமக்களின் மிக நீண்ட கால கனவு மெய்படப்போகும் காட்சி இதோ. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கொஞ்சம் விரைவாகவே நடைபெற்று வருகின்றன பால கட்டுமான பணிகள்.
வெள்ளாற்றைமுற்றிலுமாக தடுத்து மண் பாலம் கட்டப்பட்டு அதில் ஆங்காங்கே பில்லர் எழுப்பப்பட்டு வருகிறது. நாம் நடந்தே அக்கரை வரை சென்றதை முதலில் நம்பவே முடியவில்லை. ஏராளமான வெளி மாநில வேலையாட்க்களும், பிரம்மாண்டமான இயந்திரங்களும், அவைகளின் அசத்தலான இயக்கமும் அங்கு வரும் சிறு பிள்ளைகளை விழி விரிய காண வைக்கின்றன.
நமதூர் பக்கமிருந்து தான் கட்டுமான பொருட்க்கள் வரவேண்டும் என்பதனால் அக்கரை பக்கம் முதலில் பில்லர் போடப்பட்டு வருகிறது. அவை போடப்பட்டு முடிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நீர் போக்கு திறந்து விடப்படும். முழு கட்டுமானப்பணியும் முடிவடைய இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று அங்கு இருந்த கட்டுமான பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். ஹ்ம்ம்ம்ம்பார்க்கலாம்.

இந்த தற்காலிக மண் பாலத்தையும் அதன் மேல் வெகு மும்முரமாக இரவும் பகலும் நடைபெரும் வேலைகளையும் "பார்வையிட" திருவாளர் பரங்கிப்பேட்டை பொது ஜனம் குறிப்பாக தாய்மார்கள் தினமும் வருகை புரிவதுவாடிக்கையாகிவிட்டது.
aஇப்போதும் தோணியில் வந்து இறங்கும் மக்களை காணும் போது, இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான் என்று தோன்றியது.

பாலங்கள் இரண்டு


இந்த படத்திற்கு விளக்கம் தேவை இல்லை என்று முன்பு ஒரு பத்தரிகையில் தொடர் கார்டூன் வரும். நாம் ரசிப்போம். அப்படி ஒரு தலைப்பு சூட்ட பொருத்தமான இந்த படங்கள் நமது ரசிப்பிற்கு அல்ல.
சற்று உற்றுப்பார்த்தால் அருவருப்பான, தேசதுரோக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆணவம் மற்றும் மக்களின் மீதான அலட்சியப்போக்கு மெகா சைஸில் தெரியும். தெரிகிறதா?
இன்றும் வழக்கம் போல அத்தனை வாகனங்களும் அதே வேகம் குறையாமல் இந்த நொண்டி பாலத்தை கடந்து சென்று கொண்டு தான் உள்ளன. இதற்க்கு முன் இரண்டு தடவைகள் இந்த பாலம் குறித்து mypno வலைப்பூவில் பதிவிட்டும் எந்த பாயிதாவும் இல்லை. ( http://mypno.blogspot.com/2008/03/blog-post_27.html &http://mypno.blogspot.com/2008/11/blog-post_8168.html )
கும்பகோணம் பள்ளி தீவிபத்து, சரிகாஷா ஈவ்டீசிங் மரணம் போல இங்கும் எதாவது பெரிய சம்பவங்கள் நிகழ்ந்தால்தான் இவர்கள் தூக்கத்திலிருந்து விழிப்பார்கள் போல.

பாலம் இரண்டு

" வர்ர்ர்ர் ரூரூம்ம்ம்ம் ஆனா வராஆஅஆஆ...து" என்று ஏதோ வடிவேலு காமடி ரேஞ்சில் போய்கொண்டு இருக்கும் இந்த பாலம் தான் பரங்கிபேட்டை மற்றும் அதன் சுத்துப்பட்டு அத்தனை கிராமங்களுக்கும் கனவுப்பாலம்.

முஹம்மது யூனுஸ், பஜுலுர்ரஹ்மான் போன்றவர்கள், கொடி பிடிக்கும் கட்சிகள் முதல் தெருமுக்கு ஷாஜகான் வரை அத்தனை பெரும் கனவு கண்டு முட்டி மோதி முயற்சி செய்து ஒரு வழியாக ஒன்பது கோடி செலவில் பல வருடங்களுக்கு முன்பு sanction ஆகிய பாலம், இன்று கிட்டத்தட்ட பதினாலு கோடி ப்ராஜக்டாக வளர்ந்து நிற்கிறது.
நாம் சென்று பார்த்த போது ஆற்றின் கால்வாசி தூரம் மணல் அடித்து வேலை மிக ஜரூராக நடந்து கொண்டு இருந்தது. அதன் முடிவான இடத்தில் நின்று அக்கரையை ஏக்கத்துடன் பார்த்தபோது தொட்டு விடும் தூரம் தான் என்ற நம்பிக்கை துளிர்த்தது
இந்த பாலம் வந்து விட்டால் "கொல்லைக்கி போய் ரெண்டு கொத்து கருவாப்பெளை பறிச்சிட்டு வா என்பது போல் கிள்ளைக்கு போய் ரெண்டு மூட்ட அரிசிய வண்டியில போட்டுட்டு பத்து நிமிஷத்துல வா ராசா" என்று நம் வீட்டு பெண்கள் நம் சிறார்களை இயல்பாய் ஏவக்கூடிய வசதியான நிலை வரலாம்.
சில பல வருடங்களுக்கு முன்பு சமாளிக்க முடியாது என்று அடாசு ரேட்டுக்கு முன்னோர்களின் அக்கறையான அக்கறை நிலங்களை விற்றவர்கள், இப்போது யோசிக்க கூடும். இப்போது நிலம் இருந்தால் மட்டும் என்ன அவையும் மனைபிரிவுகளாக மாறி விடும்.
சிதம்பர பயணத்திற்கு கிட்டத்தட்ட பன்னிரண்டு கிலோ மீட்டர், பெட்ரோல் மற்றும் நேர மிச்சம் தரும் இந்த பாலம் இத்தனை லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

மாறி வரும் பரங்கிப்பேட்டை அடையாளங்கள் - II

மாறி வரும் பரங்கிப்பேட்டை அடையாளங்கள் - II
நாம் வசிக்கும் இல்லங்கள் நமது மனத்தின் விசாலத்தன்மையினையும், அழகியலையும் வெளிப்படுத்துவதாக எனக்கு பல சமயம் தோன்றியுள்ளது. நமதூரில் முன்பெல்லாம் இரண்டு கட்டு, மூன்று கட்டு வீடுகள் நிறைய இருந்தன. நெடிய பருத்த தூண்களுடனும், வேலைப்பாடுகள் அமைந்த முன்புற கலாதிகள், உயர்ந்த வாசற்படிகள், குறிப்பாக விசாலமான திண்னைகள் கொண்ட வீடுகள் பரங்கிப்பேட்டையின் ஒரு அடையாளமாகவே விளங்கின. இப்போது அவையெல்லாம் 40 வயது தாண்டியவர்களின் மனஅடுக்குகளிடையே தான் தேடிப்பார்க்க வேண்டியிருக்கும் போலுள்ளது.


வீடுகளில் வெயிலை பாய்ச்சும் விசாலமான, கம்பிகள் வேய்ந்த முற்றங்கள் வெயிலை மட்டுமல்ல, மழைநாட்களில் மழைத்தண்ணீரை தேக்கி (வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரங்களில்) மினி நீச்சல் குளங்களாகவே ஆகிவிடும். இரவுகளில் முற்றங்கள் வழியே விடியவிடிய வழிந்தோடும் நிலவொளியை பிடித்துவைத்து என்ன செய்யலாம் என்றெல்லாம் கிறங்க வைத்த முற்றவெளிகள் இன்று "கல்யாணகூட"ங்களாய் சுருங்கி இருக்கிறது. அகண்ட தாழ்வாரங்கள் கல்லா மண்னா விளையாட்டுக்கும், வீட்டு விசேஷங்களின் போது இரவு நேர வெட்டிப்பேச்சுகளுக்கும் ஒரு அற்புத களம்.
உப்பிய தேக்குமரத்தூண்களையும், மரப்பலகை மச்சிகளையும் கொண்ட கூடம் பனிக்காலத்தில் கதகதப்பும், வெயில் காலத்தில் காற்றோட்டமுமாக உறங்கும் இடம்.


அறைகள்.. எத்தனை பெரிய குடும்பத்தையும் இதமாக அரவணைத்துக்கொள்ளும் அன்பு கொண்டவை. திருமணம் மற்றும் விசே­ காலங்களில் இந்த இல்லங்கள் ஒரு மினி ஷாதி மஹாலேதான். அக்காலங்களில், பவுமானமும் (தமிழ் வார்த்தைதான்) பவுசும் பெருக வளைய வரும் உறவுகளால் ஏற்படும் மகிழ்வுகள் என்றும் மறக்க இயலாதவை. இரவுகளும் பகல்களாக தோன்றவைக்கும் இல்லங்கள் அவை.. பாட்டனின் அதிகாரம் தரும் மரியாதை கலந்த பயம், பாட்டியின் நிபந்தனைகளற்ற பரிவு, சிற்றப்பா/பெரியப்பாமார்களின் கண்டிப்பு, சிறிய/பெரிய அன்னைகளின் பிரியம், சகலைகளின் பனிப்போர், Centralisation of Finance, Decentralisation of Affection, பஸ்டாண்ட் பக்கம் உன்னை அதிகமா பார்க்குறேனே.. என்ற மாமாவின் கவனிப்பு ஏற்படுத்தும் நல்மாற்றங்கள், சாதாரண அறிவுகளைகூட தங்கைகளுக்கு விளக்கும் மைனிகள்..... என்று கூட்டுக்குடும்பத்தின் சகல விழுமியங்களும் கொண்ட அகராதிகள் இந்த இல்லங்களிலிருந்துதான் கட்டியயழுப்பப்பட்டன. " உலகத்தில் எனக்கு சொந்தம் மூன்றே பேர்தான் " என்ற தனிக்குடித்தன தனிமை அவலம் இந்த இல்லங்களில் இல்லாதிருந்தது. இரண்டு நாள் காய்ச்சலில் படுத்தால், கதை பேசியே கவலை போக்க ஒரு உறவுக்கூட்டத்தையே வைத்திருந்த இல்லங்கள் அவை. தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்ப சொல்லும் மனவிசாலத்தனத்தை இந்த விசாலமான இல்லங்கள் கற்றுத்தந்தன.

கொல்லைகளை பற்றி யோசித்துப்பார்த்தால் சுயபச்சாதாபம்தான் மேலிடுகிறது. எத்தனை பெரிய கொல்லைகள்? எத்தனை பசுமையான தாவரங்கள்..மரங்கள்...செடிகொடிகள்? மண்தக்காளி என்றால் எப்படி இருக்குமென்றோ, தாழம்பூ என்றால் என்னவென்றோ இப்போதைய பையன் ஒருவனிடம் கேட்டால் அவனுக்கு தெரியாது என்றுதான் தோன்றுகிறது. இன்றைய கிலோ 45 ரூபாய் கத்திரிக்காயும், 3 ரூபாய் எலுமிச்சை பழமும் அன்று அண்டை வீடுகளுக்கு மீதமாய் கொடுத்துவிடப்படும் காய்கறிகள். மாம்பழங்களும், கொய்யாக்களும் பொழுதுபோக்கு கனிகள். மகிழம்பூக்களும், டிசம்பர்பூக்களும் விரயமாகும் பூவினங்கள்.
நமது தோட்டங்கள் அடுப்பெரிக்கும் எண்ணெயை தவிர மற்ற அனைத்தையும் தந்தவை. இன்றைக்கு கட்டப்படும் இல்லங்களில் கொல்லை என்று ஒன்று 14க்கு 25 சென்டிமீட்டரில் பேருக்கு இருக்கும். அல்லது அதுவும் இருக்காது. (இன்றைய பல இல்லங்கள் எழுப்பப்பட்டதே அந்த கொல்லைகளின் மேல்தான் என்பது தனிக்கதை.)
பெருகிவரும் மக்கள் தொகையிலும், எக்குத்தப்பாக எகிறிபோய்க்கொண்டிருக்கும் நிலமதிப்பையும் கவனத்தில் கொள்ளும்போது யாரையும் எதற்காகவும் குறைசொல்லமுடியாது என்பதுதான் உண்மை. (உலக அளவில் ரியல் எஸ்டேட் ஆழமான சரிவை கண்டாலும், பரங்கிப்பேட்டையில் மட்டும் நிலமதிப்பும் சரி, வீட்டு வாடகையும் சரி எந்த மாற்றமும் இல்லாமல் உயர்ந்தே வருவது எப்படி என்பது புரியாத புதிர். குறிப்பாக, வீட்டு அட்வான்ஸ்... 50 ஆயிரம், 1 லட்சம் என்று மலைக்க வைக்கும் தொகைகள் நமதூரில் மட்டும் தான் என்று தோன்றுகிறது.) ஆனால், மிகவும் கஷ்டப்பட்டு திரட்டிய செல்வத்தை கொண்டு கட்டும் இல்லங்களில் வெளிச்சத்தையும், காற்றோட்டமான அமைப்பினையும், குறிப்பாக இயற்க்கை சார்ந்த வகையில் கட்டப்படுவதையும் கவனத்தில் கொள்வது நல்லது.
இன்றைய இல்லங்கள் எத்தனை மனிதர்கள் வசிக்கப்போகிறார்கள் என்று அல்ல, எத்தனை மனிதர்கள் இதில் வசிக்க வேண்டும் என்ற முன்தீர்மானங்களுடனே பெரும்பாலும் கட்டப்படுகின்றன என்பது தான் உறுத்தும் விஷயம். அபார்ட்மெண்ட்கள் வரலாம் அபார்ட்மெண்ட் மனோபாவம்தான் வந்துவிடக்கூடாது. இன்றைய இல்லங்களின் மிக்பபெரும் குறையாக நாம் காண்பது முக்கிய பொருளாதார முதலீட்டுப்புள்ளியாக அவை தவறாக கொள்ளப்படுவதுதான். தற்போதைய இல்லங்களின் உள்ளேயும் புறமும் பார்த்தால் மிகவும் சிரமப்பட்டு சேகரிக்கப்பட்ட பொருளாதாரத்தினை சரியான இனங்களில் செலவழிக்கும் விகிதாச்சாரம் தெரியாமல் செய்யப்பட்ட தவறான ஒரு காரியம் போல் மனதிற்கு படுகிறது.
யாரிடமும் கேட்கமுடியாமல் வட்டிக்கு வாங்கி பிற்பாடு அதன் காரண்த்தினால் மானத்தை இழக்ககூடிய சூழ்நிலையில் உள்ள சகோதரிகள் நிறைந்த இந்த சமுதாயத்தில் ஒரு சமூக கூட்டு பொறுப்புணர்ச்சி என்பது கட்டாயம் தேவை. அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்குமான வித்தியாச இழையை கண்டுபிடிப்பதில் இந்த பொறுப்புணர்ச்சி அர்த்தம் பெறுகிறது.
தற்போதைய சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், தண்ணீர் தட்டுப்பாட்டையும் பார்க்கும்போது நமது வருங்கால சந்ததியினரின் நிலை குறித்த ஆழ்ந்த கவலை தோன்றுவது தவிர்க்க இயலாததாகிறது. இந்த வரிசையில் இருப்பிட சிக்கல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தன்னிறைவற்ற மனமும், சரியான விதத்தில் கையாளப்படாத பொருளாதாரமும், மார்க்கம் கற்றுத்தரும் இயல்பான வாழ்க்கை முறையை நாம் கையாளாததும் தான் இந்நிலைக்கான காரணம் என்று மட்டும் உறுதியாக தோன்றுகிறது.