Saturday 8 May 2010

புதிய பொலிவுடன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி


புத்தம் புதிதாக கட்டப்பப்ட்டுள்ள நமதூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் ஆயிரத்தி ஐந்நூறு (1492) பெண் பிள்ளைகள் படிக்கிறார்கள். நாம் சென்று பார்த்த போது சிறு பிள்ளைகளிடம் புதிய பள்ளி வளாகத்தில் புழங்கும் மகிழ்ச்சி தெரிந்தது. விசாலமான புதிய வகுப்பறைகள், வராந்தாக்கள் .... இட நெருக்கடி மிகுந்த பழைய வண்டிக்கார தெரு பள்ளிக்கூடத்திற்கு இது எவ்வளவோ தேவலாம்.

பொலிவான முன்புற தோற்றம்

மொத்தம் உள்ள இருபத்து எட்டு செகஷன்களில் பதினாறு ரூம்கள்தான் புதிய கட்டிடத்தில். மீதி எல்லாம் கொஞ்சம்

சரியற்ற பழைய கட்டிடங்கள். அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டே ஆக வேண்டிய நிலைதான். குறிப்பாக முன்னாள் கம்ப்யூட்டர் கட்டிடம்.

ஆங்கில வழி வகுப்புக்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களாவது தற்போது தேவை.

இத்தனை மாணவிகள் எண்ணிக்கை உள்ள பள்ளிக்கு முறையான ஒரு நூலகம் இல்லை என்பது இன்னொரு அவலம். இதை போக்க பள்ளியின் முதல்வர் ஒரு புதிய முறையை கையாளுகிறார். அதாவது, பிறந்தநாள் என்றோ விசேஷம் என்றோ லீவ் கேட்டு வரும் பிள்ளைகளிடம் அவர்களாகவே முன்வந்து சில நூல்களே பள்ளிக்கு அன்பளிப்பாக தருவதற்கு அன்பாக ஊக்கமளிக்கிறார். இப்படி சேகரிக்கப்படும் புத்தகங்கள் வகுப்பு தோரும் சுற்றுக்கு விடப்படுகின்றன.

நல்ல யோசனைதான்.

இந்த திட்டத்தின் மூலம் அனைத்து வகுப்புக்கும் தலா ஒரு டிக்ஷனரி தற்போது உள்ளது.

பள்ளிக்கு முறையான பரிசோதனை கூடம் உள்ளது. உபகரணங்களில் கொஞ்சம் தன்னிறைவு தேவை.

குட்டிச்சுவர்

சீர் படுத்தப்படவேண்டிய கழிவறை

மொத்தம் ஆயிரத்தி ஐந்நூறு பிள்ளைகளுக்கு பத்து யுரினல்களும், இரண்டு கழிவறைகளும்தான் உள்ளன. (ஆசிரியர்களுக்கும் சேர்த்து). மேலும் கழிவறை பக்கமுள்ள மிக குட்டியான சுவர் ஒன்று (முன்னால் பள்ளி இருந்தபோது மாணவர்கள் ஏறி குதித்து முத்தைய முதலி தெரு வழியாக எஸ்கேப் ஆக வசதியாக இருந்த சுவர்) அபாய எச்சரிக்கை ஒலித்தவாறு கிடக்கிறது. வெளியார்களின் அத்துமீறல் தவிர்க்கப்பட, கண்டிப்பாக அந்த குட்டி சுவர் உயர்த்தபட்டே ஆகவேண்டும். (பார்க்க: படங்கள்)

ஊரில் இத்தனை ஆங்கில பள்ளிகள் இருந்தும் தங்கள் பெண் பிள்ளைகளை நமது தாய்மார்கள் இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு பொருளாதாரம் மட்டும் காரணம் இல்லை. பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஒழுங்குகளும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

பள்ளி செயல்பட துவங்குவதற்கு முன்னாள் பள்ளியின் இரு புறத்திலும் வாடகை வாகனங்கள் நிறுத்தி வைத்து இருந்தார்கள். இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் நெருக்குதலின் பேரில் அவை போலீசாரால் அப்புறபடுத்தப்பட்டன . ஆனாலும் தற்போதும் சில வாகனங்கள் அவ்வப்போது அங்கு ஸ்டாண்ட் அமைத்து நின்று வருகின்றன. (பார்க்க: படங்கள்).

மேலும் தேவையே இல்லாமல் அங்கு சுற்றி வரும் ஊர்குருவிகளுக்கு தடுப்பு வலை போட (பெண்) போலீஸ் காவல் அவ்வப்போது அந்த இடத்தில் தேவை என்பதும் மக்களின் எதிர்பார்ப்பு. நிறைவேறுமா?

பள்ளியின் முன்புறம் தனியார் வாகன நிறுத்தம்

பிள்ளைகள் அனைவரும் - குறிப்பாக கல்வியில் பின்தங்கிய சமுதாயமாக பார்க்கப்படும் முஸ்லீம் பெண் பிள்ளைகள் - படிப்பில் முத்துக்களாக ஜொலிக்கிறார்கள் என்று தனது மாணவர்களை மெச்சிக்கொள்ளும் முதல்வர், அவர்களை படிப்பில் ஊக்கப்படுத்தும் விதமாக ஊர் பொது மக்கள் சார்பாக பரிசுகள் எதுவும் பெரிதாக வழங்கபடுவது இல்லை என்ற தனது ஆதங்கத்தையும் தெரிவித்தார்.

இது விஷயத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் முயற்சிகளை வெகுவாக பாராட்டிய பள்ளி முதல்வர், பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் இந்த பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வேலைகளில் இருந்து திறப்பு விழா முதற்கொண்டு அனைத்து வகையிலும் சிரமம் பார்க்காமல் ஒத்துழைத்த விதத்தினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

ஆனால் அரசு மட்டும் இது போன்ற பெரும் காரியங்களில் முழுமை செய்ய முடியாது தான். நன்றாக படிக்கும் , விளையாட்டில் , கலையில் , போட்டிகளில் சிறப்பாக செயல்படும் மாணவிகளுக்கு பல ஊர்களில் இருப்பது போல அறக்கட்டளை அமைத்து வருடா வருடம் அவர்களுக்கு ஊக்கப்படுத்தி சிறப்பிக்கலாமே. இது போன்ற எண்டோவ்மேன்ட்கள் (endowments) இது வரை ஊரில் ஒன்று கூட இல்லை என்பது வேதனைகுரிய விஷயம்தான்.

ஊரில் உள்ள பெரும் தனவந்தர்கள் அவர்கள் பெயராலோ அல்லது அவர்களின் முன்னோர் பெயராலோவாவது ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி இது போல் உதவலாமே?

இந்த செய்தியை படிப்பவர்கள் பிரயோஜனமாக எதையேனும் செய்தால் அல்லது யாரிடமாவது சொல்லி நல்லது செய்ய தூண்டினால் புண்ணியம். செய்வோமா?

ஆக்கம் : ஹமீது மரைக்காயர் - ஜெனிபாஹ்

No comments: