Wednesday 3 April 2024

குர்ஆன் அகாடமி

 குர்ஆன் அகாடமி


நம்மை படைத்த நம்முடைய இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்புகள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு விட்டன.

நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள்.

வஹியின் வாசலும் மூடப்பட்டு விட்டது.

இப்போது நமக்கும் இறைவனுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு அவனுடைய வார்த்தைகளான இறைவேதம் குர்ஆன் மட்டும் தான்.

தொழுகை என்பது வலுவுடன் கட்டாயமாக்கப்பட்டதும் பள்ளிவாசல்களில் கண்டிப்பாக வந்து தொழ வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டதற்கு  குர்ஆன் எனும் இறைவனின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தப்படுவதற்காக என்பது ஒரு முக்கியமான காரணம்.

குர்ஆன் ஓதப்படும் போது வேறு எதையும் நாம் செய்யக்கூடாது, செவி தாழ்த்தி கேட்க மட்டும்தான் செய்ய வேண்டும் என்று குர்ஆன் சொல்வதற்கும்

போதையோடு இருக்கும் நிலையில் தொழாதீர்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிய வேண்டும் என்று குர்ஆன் எச்சரிப்பதற்கும்

பின்னணியில் உள்ள காரணங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

இந்த உம்மத்தின் மீது படிந்திருக்கும் ஏராளமான பித்னாக்களில் தலையாய பித்னாவாக குர்ஆனிலிருந்து இந்த உம்மத் விலகி நிற்பது, குர்ஆனோடு தொடர்பில்லாமல் இருப்பது என்பதை சொல்லலாம்.

நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன்
ஒன்று இறைவனின் வேதமாகிய குரான் இரண்டாவது எனது குடும்பத்தினர் அஹ்லே பைத்,
 என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது..

குர்ஆனை ஓதுவதில் உள்ள நன்மையை உணர்ந்து நியமமாக ஓதி வரும் நாம், அதன் உள்ளர்த்தத்தை, அது நமக்கு எடுக்க விரும்பும் பாடத்தை படிக்க மறந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

இஸ்லாத்தின் கடும் எதிரியாக விளங்கிய உமர் ரலி அவர்கள் குர்ஆனின் சில வரிகளை படித்தவுடன் அவர்களை தலைகீழாக மாற்றிய அந்த அற்புத சக்தி இன்று நம்மிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதன் பொருள் தான் என்ன?

மாபெரும் சாம்ராஜ்யங்களை ஈர்க்குச்சி போன்ற வாட்களை கொண்டு வீழ்த்திய அந்த உன்னத மனிதர்களிடம் குரானை தவிர வேறு எந்த ஆயுதங்கள் இருந்தது?

வெள்ளையர்கள் இஸ்லாமிய உலகினை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த முயன்ற போது,  அவர்கள் செய்துவற்றில் மிக மிக முக்கியமானது குர்ஆனை இந்த உம்மத்தில் இருந்து விலக்கியது அல்ல,  அது முடியாது என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தந்திரமாக குர்ஆனிய மொழியை நம்மிடம் இருந்து நீக்கி அதற்கு ஆங்கிலத்தை ஒரு மாற்றாக பிரதியிட்டார்கள்.

 குர்ஆனை ஓதுவது மட்டுமே மிகப்பெரும் நன்மை என்று நம்மை திசை திருப்பினார்கள்.

 இதுவே அவர்களின் பெரும் வெற்றியாகவும் இந்த உம்மத்தின் மிகப்பெரும் சோதனையின் ஆரம்பமாகவும் அமைந்து விட்டது.


ஆக,
இந்த பித்னாவிலிருந்து இருந்து மீண்டு எழுவது எப்படி?

குர்ஆனிய அரபியை நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

குர்ஆன் ஓதும் போது அது நமக்கு வார்த்தை வார்த்தையாக புரிய வேண்டும்.

 தொழுகையில் குர்ஆன் ஓதப்படும் போது அதன் பொருள் உணர்ந்து நாம் அழுது கரைய வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், குர்ஆனை பொருள் அறிந்து ஓதுவதற்கு,
 குர்ஆனிய அரபிக் மொழியை கற்றுக்கொள்வதற்கு ஒரு எளிய தளமாக குர்ஆன் அகாடமி துவங்கப்படுகிறது.

மிக எளிமையான
மிக சுருக்கமான
மிக சுவாரசியமான வகுப்புகளாக அமைவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

நாளை நம் அதிபதின் முன்
அவன் வழங்கிய வேதத்தை  நாம் எப்படி கையாண்டோம் அதனுடன் எவ்வாறு நடந்து கொண்டோம் என்று நல்ல முறையில் பதில் சொல்வதற்கு இது ஒரு வழியாக அமையும் என்று
 நம்பிக்கை வைப்போம்.

இந்த முயற்சிக்கு அல்லாஹ்  அருள் புரிந்தவர்களை தவிர வேறு யார்தான் கைகோர்த்து நிற்பார்கள்... ஒத்துழைப்பார்கள்..

No comments: